குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய்களைத் தூர்வாருதல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரிகாலன் கட்டிய கல்லணையை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள முதலை முத்துவாரி கொடிங்கால் வாய்க்கால் மற்றும் பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியில், உய்யகொண்டான் ஆற்றில் உள்ள புதிய மணல் போக்கி மற்றும் கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்.முதலமைச்சரின் மேட்டூர் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.