உடல்நிலையில் முன்னேற்றம்? மீண்டும் சிறைக்கு செல்லும் சிவசங்கர் பாபா!

சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் இன்று அல்லது நாளை மீண்டும் சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

உடல்நிலையில் முன்னேற்றம்? மீண்டும் சிறைக்கு செல்லும் சிவசங்கர் பாபா!

சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் இன்று அல்லது நாளை மீண்டும் சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகள் பாலியல் புகார்கள் கொடுத்தனர். அதனடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார் சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 16 ஆம் தேதி தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்ததாக சுஷ்மிதா என்ற நடன ஆசிரியையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு கடந்த 19 ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தலையில் சிறுகட்டி இருப்பதாகவும், அதை மருந்து மூலமே குணமாக்கிவிடலாம் என சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மருத்துவ நிர்வாகம் தரப்பில் அறிக்கை அனுப்ப உள்ளனர்.

இதனையடுத்து சிவசங்கர் பாபாவை மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். ஏற்கெனவே சிவசங்கர் பாபாவை  விசாரிக்க 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் சிவசங்கர்பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது போலீஸ் காவல் வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.