இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்...உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சொல்வது என்ன?

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்...உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சொல்வது என்ன?

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீடு 2022-ன் ஆய்வறிக்கை:

உலகில் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடுகள் குறித்து குளோபல் அனலிடிக்ஸ் நிறுவனம் முக்கியமான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வறிக்கையை சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீடு 2022 என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியல் "மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வு மற்றும் குற்றம் மற்றும் பாதுகாப்பில் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள்" ஆகியவை தொடர்பாக நான்கு கேள்விகள் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,27,000 பேரிடம் கேட்கப்பட்டு அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை உலக நாடுகள் மிகவும் சுவாரஸியமாக விவாதிக்க தொடங்கியுள்ளன.

முதலிடம் பிடித்த நாடுகள்:

குளோபல் அனலிடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது சிங்கப்பூர், 96 புள்ளிகளுடன் உலகிலேயே அதிக பாதுகாப்பு நிறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக,   95 புள்ளிகளுடன் தஜிகிஸ்தான் இரண்டாவது இடத்தையும், 93 புள்ளிகளுடன் நார்வே மூன்றாவது இடத்தையும், 92 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து, அதே 92 புள்ளிகளுடன் இந்தோனேசியா  ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. இதேபோல் பாதுகாப்பில் கடைசி 5 இடத்தை பிடித்த நாடுகளாக  சியர்ரா லியோன் (59 புள்ளிகள்), டிஆர் காங்கோ (58 புள்ளிகள்), வெனிசுலா (55 புள்ளிகள்), காமோன் (54 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (51 புள்ளிகள்) ஆகிய நாடுகள் கடைசி இடத்தை பிடித்துள்ளன.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்தது நயன் - விக்கி இரட்டைக் குழந்தை விவகாரம்....அறிக்கை சொன்னது என்ன?

இந்தியாவுக்கு எந்த இடம்:

இந்நிலையில், குளோபல் அனலிடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகில் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 60 வது இடம் கிடைத்துள்ளது. ஆனால், தொடர்ச்சியாக எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பது, பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது, உலக நாடுகளிடம் கண்டனத்தை பெறுவது என சர்ச்சைகளில் சிக்கும் பாகிஸ்தான் 48வது இடத்தை பிடித்துள்ளது. உலக பாதுகாப்பு பட்டியலில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் அரங்கேறி வருகிறது.

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்:

சமீபத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று சும்மா மாஸ் காட்டியது. ஆனால், உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அப்படியே தலைகீழாக மாறி பாகிஸ்தானிடம் இந்தியா வீழ்ந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, இந்த விஷயத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி விட்டதாக பேசிக்கொள்கின்றனர்.

ஆகமொத்தம் குளோபல் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீடு 2022 யை பார்க்கையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை அறிய முடிகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.