குஜராத்தில் 7வது முறையாக மலர்ந்த தாமரை...இதுவரை இல்லாத சாதனையை செய்தது எப்படி?

குஜராத்தில் 7வது முறையாக மலர்ந்த தாமரை...இதுவரை இல்லாத சாதனையை செய்தது எப்படி?

குஜராத்தில் 7வது முறையாக ஆட்சிக்கட்டிலை பிடித்த பாஜக...எவ்வளவு இடங்களை கைப்பற்றியது...!

பாஜக vs காங்கிரஸ்:

பொதுவாக வட மாநிலங்களில் தேர்தல் என்றால் அது பாஜக vs காங்கிரஸ் தான் பிரதான தேசிய கட்சிகளாக இருந்து வரும், ஆனால் தற்போது காங்கிரஸின் நிலை சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிம்பத்தை மாற்றிய ஆம் ஆத்மி:

இப்படி இருக்க கூடிய நிலையில், குஜராத் சட்டசபை தேர்தல் கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வட மாநிலங்களில் தேர்தல் என்றாலே எப்போதும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் மோதல் ஏற்படும் என்ற பிம்பத்தை மாற்றி பாஜகVSகாங்கிரஸ்VSஆம் ஆத்மி என்ற மும்முனை போட்டியை ஆம் ஆத்மி இந்த தேர்தலில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் இந்த முறை கடுமையான போட்டி நிலவி வந்தது.

தொடர் வெற்றியை சந்தித்த ஆம் ஆத்மி:

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 67 இடங்களை வென்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் 62 இடங்களை கைப்பற்றி  மீண்டும் ஆட்சிக்கட்டிலை பிடித்தது. இதனால் அதுவரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த டெல்லியை ஆத் ஆத்மி வென்று அதனை முறியடித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எதிராக களம் இறங்கிய ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் 92 இடங்களை வென்று ஆட்சியில் இருந்த காங்கிரஸை தோற்கடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இப்படி தொடர் வெற்றியை சந்தித்து வந்த ஆம் ஆத்மி கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 250 வார்டுகளில் 136 வார்டுகளை வென்று டெல்லியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாஜகவை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றது. 

பாஜகவின் கோட்டை:

இதையடுத்து பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலிலும் வெற்றி கனியை சுவைப்போம் என்று சவால்விட்டு தைரியமாக களம் இறங்கியது. குஜராத் என்றாலே அது பாஜகவின் கோட்டை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏனென்றால், கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி தான் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவிற்கு இணையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி மிக தீவிரமாக ஈடுபட்டது. இதனால் 27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி வென்று ஆட்சியை பிடிக்குமா? என்ற பிம்பம் அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வந்தது. அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியை சந்தித்து வரும் காங்கிரஸ் மீண்டும் உயிர்பெற்று எழுமா? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் நிலவி வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை இருந்தது.

குஜராத் தேர்தல்:

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில், தொடக்கத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் வெளியான தகவலை இந்த முன்னணி நிலவரங்கள் உறுதிப்படுத்தியது.  

பெரும் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ்:

அதன்படி, பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜ.க. 154 க்கும் அதிகமான  இடங்களை கைப்பற்றி தொடர்ந்து முன்னிலை வகித்தது. அதேசமயம் பாஜகவுக்கு சவாலாக களம் இறங்கிய காங்கிரஸ் வெறும் 16 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 99 இடங்களை கைப்பற்றிய நிலையில் வெற்றி கண்டது. ஆனால் காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றி மிக நெருக்கத்தில் வந்து பெரும் சவாலை ஏற்படுத்தி இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவையே தற்போது சந்தித்துள்ளது. 

சவாலுடன் களமிறங்கிய கட்சி:

அதேபோல், டெல்லி நகராட்சி மற்றும் பஞ்சாப் தேர்தலில் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி, மிகப்பெரிய சவாலுடன் குஜராத் தேர்தலில் களம் இறங்கியது. ஆனால், குஜராத் வாக்காளர்களிடையே பெரிய அளவிலான தாக்கத்தை ஆம் ஆத்மி கட்சியால் ஏற்படுத்த முடியவில்லை என்றே சொல்லலாம். காரணம் அக்கட்சிக்கு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை கிடைத்துள்ளது. சவாலுடன் களமிறங்கிய கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகவே அரசியல் பார்வையாளர்களிடையே பார்க்கப்படுகிறது.

7வது முறையாக மகுடம் சூடிய பாஜக:

இப்படி பாஜகVSகாங்கிரஸ்VSஆம் ஆத்மி என்று கடுமையான மும்முனை போட்டி நிலவிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜ.க. 154 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி ஆட்சிக்கட்டிலைப் பிடித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல்  தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., தற்போது 7-வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் இந்த  அசுர வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பதவியேற்பு நாள்:

இதனைத்தொடர்ந்து, குஜராத்தின் கட்லோடியா தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் பூபேந்தர் படேல் அபார வெற்றி பெற்றதையடுத்து, வரும் 12-ம் தேதி காந்தி நகரில் நடைபெறும் விழாவில் குஜராத் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் பதவியேற்க உள்ளதாகவும், பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் மாநில பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.