செய்தியாளர்களை சந்திக்க காத்திருக்கும் சசிகலா..! ஆட்டம் கண்டுள்ள அதிமுக தலைமை..!

இன்னும் ஒரு வாரத்தில் நிகழவிருக்கும் பிரளயம்..!

செய்தியாளர்களை சந்திக்க காத்திருக்கும் சசிகலா..! ஆட்டம் கண்டுள்ள அதிமுக தலைமை..!
ஸ்கெட்ச் போட்டு அமமுக நிர்வாகிகளை திமுக பக்கம் தூக்கி சென்றுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதிமுக பிரியும் போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான செந்தில்பாலாஜி அங்கிருந்து மீண்டும் திமுக பக்கம் சாய்ந்தார். 
 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது திமுக. தற்போது திமுகவில் தன் பலத்தை நிரூபிக்க, அதிமுகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாது அமமுக நிர்வாகிகளை சிறிது சிறிதாக திமுக பக்கம் இழுத்து வந்தார். 

அமமுக நிர்வாகிகளை தனித்தனியே வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுத்து கவுத்தார் செந்தில்பாலாஜி. சின்ன சின்ன இடங்களில் கை வைத்த அவர், அமமுகவின் துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் போன்ற பெரிய கைகளையும் தனது கைக்குள் நுழைத்தார். இவரது விருந்திற்கு சென்று வந்த பிறகு சசிகலாவிடம் செல்போனில் உரையாடியவர்களும் உண்டு. சசிகலாவின் பேச்சில் திருப்தியாத பழனியப்பன் திமுகவில் இணைந்தார். 

இதற்கு சசிகலாவும் சரி, டிடிவி தினகரனும் சரி எவ்வித பதிலோ, எதிர்ப்போ எதுவுமே தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருவதால், அமமுகவினர் பாதுகாப்பு தன்மையை இழந்து வருவதாக தெரிவிக்கின்றனர் அரசியல் வட்டாரங்கள். அதனால் இனி இங்கிருந்தால் ஒரு காயும் நகர்த்த முடியாது என அறிந்த அமமுகவினரும் திமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். 
 
இதற்கிடையில் விரைவில் சசிகலா செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அமமுகவினர் அரசல் புரசலாக தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது திமுகவில் இணைந்தவர்களுக்கு அவர் பதிலளிப்பார் என்கின்றனர் விசுவாசிகள்..