68 ஆண்டுகள் கடந்த அணை! பவானிசாகரின் சிறப்புகளைப் பார்ப்போம்!

பவானிசாகர் அணை கட்டி 67 ஆண்டுகள் முடிவடைந்து 68 வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. பவானிசாகர் அணையின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாமா?

68 ஆண்டுகள் கடந்த அணை! பவானிசாகரின் சிறப்புகளைப் பார்ப்போம்!

இந்தியாவில் தண்ணீர் என்பது எப்போதுமே ஒரு பேசுபொருளாகவே உள்ளது. காவிரி தொடங்கி, அணை வரை அனைத்துமே தமிழ்நாட்டின் அடையாளங்களாக இருக்க, சுதந்திரம் பெற்ற பிறகு கட்டப்பட்ட ஒரு அணை இன்று 68வது ஆண்டில் காலெடுத்து வைக்கிறது. ஆம்! பவானிசாகர் அணை பற்றி தான் பேசுகிறோம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை, ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு.

அன்றே கோடி கணக்கில் செலவு!

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே, கிட்டத்தட்ட 10.50 கோடி செலவில் இந்த அணை கட்டப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின், 1948 ஆம் ஆண்டு, இந்த அணையின் கட்டுமானப்பணி துவங்கியது. தொடர்ந்து ஏழு ஆண்டு கடும் பணிகளுக்கு பின் 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர், இந்த பவானிசாகர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும் படிக்க| தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட பவானிசாகர் அணை...!

குடிநீர் முதல் பாசன வசதி வரை!

நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளத்தின் வடக்கு பகுதிகள் உள்ளிட்டவைக்கு இடையில் தான் இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதி அமைந்துள்ளது. 105 அடி உயரமாக கணக்கிடப்படப்படும் இந்த பவானிசாகர் அணையில், 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம். அப்படி பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

இந்த அணையில் இரண்டு நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

1953 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளின் போது அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அணை கட்டப்பட்டதால், இப்பகுதியில் இருந்த தரிசு நிலங்கள் அனைத்தும் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. சிறு சிறு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குடிநீர் தேவை பூர்த்தி ஆனது.

பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும், 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது. மேலும், அதே போல் பவானிசாகர் அணை கடந்த 2018-22-ம் ஆண்டு வரை,  தொடர்ந்து 5 ஆண்டுகளாக நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

இவற்றைத் தாண்டி, பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச் சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. டணாய்க்கன் கோட்டை என அழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை, இந்த பவானிசாகர் அணையில் இருக்கும் நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்த கோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத் தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை, அவர் ஆண்டு வந்த காலமான கி.பி 1254ஆம் ஆண்டில், ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டதாக தகவல்கள் கூறுகின்றன. தண்டநாயக்கன் கோட்டை எனப் பெயரிடப்பட்ட இந்த கோட்டை, நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னமும் உறுதியுடன் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோட்டையைப் பார்க்கும்போது அன்றையக் கட்டிடக்கலையின் தொழில்நுட்பம் மேலோங்கி நிற்பது தெரிகிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கனஅடி நீர், சுமார் 120 நாட்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,00,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான இந்த பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்