நூறாண்டு கால போராட்டத்தின் பின்னடைவா? 10% இட ஒதுக்கீடு...முதலமைச்சர் பரபரப்பு அறிக்கை சொல்வது என்ன?

நூறாண்டு கால போராட்டத்தின் பின்னடைவா? 10% இட ஒதுக்கீடு...முதலமைச்சர் பரபரப்பு அறிக்கை சொல்வது என்ன?

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்ப்புகளிடையே வெளியான தீர்ப்பு:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்த வழக்கு, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. 

பின்னடைவு அடைந்த நூற்றாண்டு கால போராட்டம்:

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது.  இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு ”சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என்றே கருத வேண்டியுள்ளது.

இதையும் படிக்க: 10% இட ஒதுக்கீடுக்கான தீர்ப்பு...ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவு:

எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்:

சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, ”சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் இன்று வெளியான தீர்ப்புக்கு எதிராக குறிப்பிட்டுள்ளார்.