தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல; ஜனநாயக சக்திகளே ஒன்றிணைய வேண்டும்...வைகோ பரபரப்பு அறிக்கை!

தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல; ஜனநாயக சக்திகளே ஒன்றிணைய வேண்டும்...வைகோ பரபரப்பு அறிக்கை!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மதிமுக கட்சி தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

10% இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்த வழக்கு, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான வழக்குகள்:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக, விசிக, பாமக என பல்வேறு கட்சியினரும் எதிர்த்து வரும் நிலையில், மதிமுக கட்சியின் தலைவர் வைகோவும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கி முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. சமூகநீதிக் கோட்பாட்டையே தகர்க்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதையும் படிக்க: பேரடியாக விழுந்த தீர்ப்பு...கண்டிப்பா இதை செய்வோம்...திருமா பரபரப்பு பேட்டி!

இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது:

ஏற்கனவே, உச்சநீதிமன்றம் மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. அரசு அரசியல் சாசனத்தின் சமூகநீதிக் கோட்பாட்டிற்கு எதிராக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்தது சமூக நீதியையே நீர்த்துப் போகச் செய்கிற நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு:

உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

3 பேருக்கு செல்லும்; 2 பேருக்கு செல்லாது:

இந்த முக்கியமான வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்றும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரபட் ஆகிய இருவரும் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

103வது திருத்தச் சட்டம்:

முன்னதாக,மண்டல் குழு வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதை முறியடிப்பதற்குத்தான் மத்திய  பா.ஜ.க. அரசு, அரசமைப்புச் சட்டத்தில் 103 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து, உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையது அல்ல:

இப்படி ஒட்டுமொத்தமாக சமூகநீதி தத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில், பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய 103 ஆவது சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை  தகர்த்திருக்கிறது. இதனை உச்சநீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் செல்லும் என்று கூறி இருப்பது ஏற்கத் தக்கது அல்ல. சமூகநீதிப் போராட்டத்தில் நீண்ட நெடிய களங்களை சந்திக்க வேண்டிய நிலைமையை இத்தீர்ப்பு உணர்த்துகிறது. எனவே, சமூக நீதிக்காகப் போராடும் ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவ்வறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.