முடக்கப்பட்ட பப்ஜி மதனின் வங்கி கணக்கு.. வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் பணம்..!

பப்ஜி மதனின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் இருப்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முடக்கப்பட்ட பப்ஜி மதனின் வங்கி கணக்கு.. வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் பணம்..!
பெண்கள் குறித்து தனது யூ-டியூப் சேனலில் ஆபாசமாக பேசி வந்த பப்ஜி மதன் என்கிற மதன் குமார் தர்மபுரி மாவட்டம் மதுக்கூன் பாளையம் என்ற இடத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவரின் வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் பணம் இருப்பு வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே மதனின் 2 சொகுசுக் கார்கள் லேப்டாப், செல்போன், விலையுயர்ந்த டேப்லெட்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கும் நிலையில் தற்பொழுது அவரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

 
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் சர்வர் மூலம் விளையாடி அதை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து வந்த மதன் தனது யூ-டியூப் சேனலில் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாகவும், அவரது சேனலை பின் தொடரும் சிறுவர் சிறுமிகளை அவரின் பேச்சு தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவும் சமூல வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.
 
மேலும், பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைமில் 2 புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் மத்தியக் குற்றப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் புளியந்தோப்பு சைபர் கிரைமில் அளிக்கப்பட்ட புகார்களும் மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு யூ-டியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
யூ-டியூபர் மதன் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை பிடிக்கும் பொருட்டு மதனின் தந்தை, அண்ணன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 
விசாரணையில் மதனின் மனைவி கிருத்திகா மதனுக்கு யூ-டியூப் சேனல் நடத்த உடந்தையாக இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், மதன் யூ-டியூப் மூலம் மாதம் 7 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி அதன் மூலம் சொகுசுக் கார்கள் மற்றும் சொகுசு பங்களாக்களை வாங்கிக் குவித்ததும் தெரியவந்தது.
 
இதனையடுத்து மதனை தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலம், பெங்களூர், தர்மபுரி ஆகிய இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பப்ஜி மதன் தர்மபுரி மாவட்டம் மதன்கூன்பாளையம் என்ற இடத்தில் உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதனை மத்திய குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்து அவரிரம் இருந்து லேப்டேப், செல்போன், கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

 
மேலும், சென்னையில் இருந்து அவரின் இரண்டு சொகுசுக் கார்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மதனின் வங்கிக் கணக்கையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். அவரின் வங்கிக் கணக்கில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் இருப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கைது செய்யப்பட்டுள்ள மதனை சென்னை அழைத்து வந்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தவும், பின்னர் அவரை காவலில் எடுத்து அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், மதன் மூலம் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் இன்னும் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பட்டியலெடுத்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.