விடிய விடிய மது அருந்தி மூவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்...மதுவில் விஷம் கலந்த நபர் கைது

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே தீபாவளி கொண்டாட விடிய விடிய மது அருந்தி மூவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, மதுவில் விஷம் கலந்ததாக கூறி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விடிய விடிய மது அருந்தி மூவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்...மதுவில் விஷம் கலந்த நபர் கைது

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன், சக்திவேல். இவர்கள் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையில் கோவையில் தங்கி சமையல்காரராக பணியாற்றி வந்த தென்காசியை சேர்ந்த முருகானந்தம் என்பவரும், இவர்கள் இருவருடன் நண்பராக இருந்துள்ளார்.

நண்பர்களான மூவரும் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மது அருந்தி கொண்டாட முடிவு செய்து மூவரும் மது அருந்தியுள்ளனர். மறுநாள் விடுமுறை என்பதால் கூடுதலாக மது அருந்த எண்ணி மாலை 6.30 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மது வாங்கி பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து  விடிய விடிய மது அருந்தியுள்ளனர்.

மது அருந்தி முடித்தவுடன் மூவரும் அப்பகுதியை விட்டு கிளம்பியுள்ளனர். இதில் சக்திவேல் என்பவருக்கு போதை அதிகமானதால் செல்லும் வழியில் கீழே அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தார்.

அவரைத் தொடர்ந்து முருகானந்தம் வழியிலேயே சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் அளித்த நிலையில் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பார்த்திபன் தனது வீட்டின் அருகே இறந்த நிலையில் கிடந்தார். பின்னர் அவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியிலுள்ள தடயங்களை எடுத்துச்சென்றனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்து, மூவரின் மரணம் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் விடிய விடிய மதுபானம் அருந்தியதால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் குடித்த மதுவில் டின்னர் கலந்ததாக கூறப்பட்ட நிலையில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்க்கொண்ட போலீசார், முன்பகை காரணமாக மதுவில் விஷம் கலந்த அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.