”கல்யாணம் ஆனாலும் நீ என்னுடன்தான் வாழ வேண்டும்” திருமணமான பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காவலர் கைது...

பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

”கல்யாணம் ஆனாலும் நீ என்னுடன்தான் வாழ வேண்டும்” திருமணமான பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காவலர் கைது...

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி, இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்கும் போது இருவரும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு பின்பு அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதையறிந்த காவலர் நேசமணி அந்தப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உனக்கு திருமணம் ஆனாலும் நீ என்னுடன்தான் வாழ வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காதலிக்கும் போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார்.  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து  சென்னையில் இருந்த நேசமணியை கைது செய்து பொள்ளாச்சி அழைத்து வந்தனர். பின்னர் காவலர் நேசமணி மீது பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைத்தனர்.