கட்டிய தாலியை காவல் நிலையத்திலேயே கழற்றி வீசிய பெண் வீட்டார்... மனமுடைந்த காதலன் தற்கொலை

நாகை அருகே தாலி கட்டிய பிறகு காதலியை காவல் நிலையத்தில் வைத்து பிரித்ததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கட்டிய தாலியை காவல் நிலையத்திலேயே கழற்றி வீசிய பெண் வீட்டார்... மனமுடைந்த காதலன் தற்கொலை

வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார், சிவநந்தினி ஆகியோர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். பெண் வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் வெளியூருக்குச் சென்று கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மகளை காணவில்லை என கடந்த 11ஆம் தேதி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். புகாரைப்பற்றி அறிந்த காதல் ஜோடிகள் கடந்த 19- ஆம் தேதி வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரவிந்தை பெண் வீட்டார் மிரட்டியதோடு தாலியை கழற்றி வீசி இத்திருமணம் செல்லாது என பெண்ணை அழைத்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த்குமார் காதலியை பிரிந்த சோகத்தில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே வேளாங்கண்ணி காவல் நிலைய வாசலில் தாலி கிடக்கும் காட்சிகள், அரவிந்த்குமார், சிவநந்தினி ஆகியோர் கோவிலில் திருமணம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள், இரத்தத்தால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஆகியவைகள் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.