ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்: காட்டுக்குள் சிறுமியை தூக்கிச்சென்று கொலை செய்த கொடூரம்

செங்கல்பட்டில் ஆபாச படங்களுக்கு அடிமையான 17 வயது சிறுவன், 11 வயது இளம் சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்:  காட்டுக்குள்  சிறுமியை தூக்கிச்சென்று கொலை செய்த கொடூரம்

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பகுதியில் 11 வயது சிறுமி மாயமான நிலையில், ஒதுக்குப் புறமான காட்டுப் பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. படிக்கும் 17 வயது மாணவர் தான் கடைசியாக அந்தச் சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது.

அவனைப் பிடித்து விசாரித்த போது அவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளான். இந்த நிலையில், சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில், சம்பவ தினத்தன்று அந்தச் சிறுவனின் செல்போன் எண்ணின் சிக்னல் உறுதி செய்யப்பட்டது. 

அவனது செல்போனைப் பறிமுதல் செய்து பார்த்த போது ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். விசாரணையில் ஆபாச இணையதளங்களை தேடித் தேடிச் சென்று மணிக்கணக்கில் ஆபாச படங்களை பார்த்து வந்த சிறுவன், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டதோடு, சிறுமி தனது தாயிடம் கூறுவதாக சொன்னதால், சிறுமியின் உடலில் பல இடங்களில் கடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்தது.

இன்னும் உடற்கூறாய்வு செய்யப்படாத நிலையில், போலீசார் சிறுவனை கொலை வழக்கில் கைது செய்தனர். பெற்றோர் இல்லாமல் உறவினர் வீட்டில் வளர்ந்த அந்த சிறுவன், ஆபாச படங்களை பார்த்து சீரழிந்ததோடு, அவனுக்கு கஞ்சா பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.