திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்காததால் காதலியின் அண்ணனை கடத்திய காதலன் கைது…

திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்காததால் ஆத்திரத்தில் காதலியின் அண்ணனை காரில் கடத்திய காதலன் உட்பட 3 பேர் போலீசார் கைது செய்தனர்.

திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்காததால் காதலியின் அண்ணனை கடத்திய காதலன் கைது…

சென்னை சூளைமேடு மங்கல் நகரை சேர்ந்தவர் சிராஜ் பாஷா. மனைவி பாத்திமா சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் மகன் தஸ்லீம்  பாஷா மற்றும் மகள் ஆயிஷா பேகம் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி பாத்திமாவின் தங்கை மகளான தில்சத் பேகம் ஈ.சி.ஆர் பகுதியிலுள்ள வருண் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

 இது குறித்து சிராஜ் பாஷாவிற்கு தெரியவரவே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என வருணிடம் கூறியுள்ளார். இது வருணுக்கு பிடிக்காமல் சிராஜ் பாஷாவிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் தில்சத் பேகமிற்கு வேலூரை சேர்ந்த தவ்பீக் என்பவருடன் திருமணம் பேசி முடித்துள்ளனர்.

 தனது காதலிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்ட விவரம் வருணுக்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த வருண் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிராஜ் பாஷாவின் மகனான தஸ்லீம் பாஷாவை காரில் கடத்தி சென்றதோடு, தஸ்லீம் பாஷாவின் செல்போனிலிருந்து சிராஜ் பாஷாவின் மகள் ஆயிஷா எண்ணிற்கு தொடர்பு கொண்டு தில்சத் பேகம் உடனே என்னுடன் வரவேண்டும் எனவும், இல்லையென்றால் தஸ்லீம் பாஷாவை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

 இதனை ஆயிஷா சிராஜிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து பதற்றமடைந்த சிராஜ் பாஷா உடனடியாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வருணை தொடர்பு கொண்டு மிரட்டிய செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்ததில் கல்பாக்கம் அருகே உள்ள கொய்யாத் தோப்பு என்ற இடத்தில் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரை கண்டவுடன் வருண் மற்றும் அவனது நண்பர்களான வினோத், தமிழ் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து இரு குழுக்களாக பிரிந்த போலீசாரின் ஒரு குழு வருண் மற்றும் நண்பர்களை துரத்த, மற்றொரு குழுவினர் கடத்தப்பட்ட தஸ்லீம் பாஷாவை மீட்டு அவரை கடத்தப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து தப்பியோடிய தமிழ், வினோத் மற்றும் காதலன் வருண் ஆகியோரை சூளைமேடு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது  முறையற்று தடுத்தல், கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.