ஓய்வூதிய நிலுவை தொகை பெற லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்...

தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் செயல்படும் சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்  34  ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓய்வூதிய நிலுவை தொகை பெற லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்...

தருமபுரி மாவட்டம்,  எஸ்.வி.,ரோட்டை சேர்ந்த  சின்னசாமி இவர் வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வு ஊதியம் வாங்கி வந்த நிலையில்  கடந்த 2007 ஆண்டு அவர் இறந்ததால், அந்த குடும்ப ஓய்வு ஊதியம் அவரது மனைவி சென்னாம்மாள் வாங்கி வந்த நிலையில் அவரும் கடந்த 2019 ஆண்டு இறந்து விட்டார். அவரது மகள் சாந்திக்கு கணவர் இல்லாததால் தாய் வாங்கி  வந்த குடும்பநல  ஓய்வூதியத்தை மகள் சாந்தி பெயருக்கு மாற்ற அவரது உறவினர் முருகன்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள   மாவட்ட வன அலுவலகத்தில் செயல்படும் சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.

மேலும்  3 ஆண்டுகள்  ஓய்வு ஊதிய நிலுவை தொகை  ரூபாய் 4 லட்சத்தை பெறவும் விண்ணப்பித்துள்ளார். அப்போது அங்கு இளநிலை உதவியாளராக பணியாற்றும் பழனிசாமி என்பவர் 35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சாந்தியின் உறவினர்  முருகன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் ஆலோசனைப்படி முருகன்  சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலகத்திற்கு சென்று இளநிலை உதவியாளர் பழனிசாமியிடம் லஞ்சப்பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறையினர் லஞ்சம் வாங்கும் போது பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்த 34 ஆயிரத்து 410 ரூபாயை பறிமுதல் செய்து   ஐந்து மணி நேர விசாரணை   பிறகு அவரை  கைது செய்து அழைத்து சென்றனர்.