விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்!!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்!!

திருவெறும்பூர் அருகே நொச்சிவயல் புத்தூரை சேர்ந்த வித்யாலட்சுமி தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 12ஆம் தேதி மாணவி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அப்போது சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழிமறித்தனர். தொடர்ந்து அவர்கள் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி மாணவியை குடிக்க வைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடந்த 18ஆம் தேதி மாணவியின் தாய் பெல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடவந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு காரணமானோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறி உறவினர்கள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.