கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை
ஆந்திர மாநிலம் குண்டூரில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்த மாணவி ரம்யா. இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள உணவகத்தில் உணவு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் ரம்யாவிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் மாணவியை பைக்கில் ஏறி தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை கண்டு ஆவேசமடைந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் ஆறு முறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த ரம்யாவின் பெற்றோர், பலத்த காயமடைந்த தமது மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரம்யாவின் செல்போனை கைப்பற்றி, கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரம்யாவிற்கு அறிமுகமான நபர் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும், அல்லது காதல் விவகாரத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.