தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்... பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது...

தொழில்அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். 

தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்... பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது...

சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் எபனேசர். ஆர்ஜி ஆம்புலன்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இவரது செல்போனுக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர், "அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணன் வருகிற 15ஆம் தேதி கோர்ட்டுக்கு வர உள்ளார்.  அப்போது நீ ரூ. 50 ஆயிரம் எடுத்துக்கொண்டு வா, இல்லை என்றால் உன் மண்டை சிதறி விடும்" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக எபனேசர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் 385- மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தல், 506(1)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.  

தற்போது அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணன் வேலூர் சிறையில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளான பாஸ்கர், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவுடி வடிவேலு ஆகியோர் மீது வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஸ்கர், வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் வடிவேலு மீது கொலை, கொலை முயற்சி உள்பட 12 வழக்குகள் உள்ளது. பாஸ்கர் மீது கொலை,  கொலை முயற்சி உள்பட 25 வழக்குகள்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.