சொகுசு கார்கள் வாங்கி விற்க பணம் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி...

சொகுசு கார்கள் வாங்கி விற்க பணம் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட நபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

சொகுசு கார்கள் வாங்கி விற்க பணம் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி...

சென்னை மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு அறிமுகமான அண்ணா நகரைச் சேர்ந்த சுதாகரன் என்பவர், தான் பென்ஸ், ஆர்டி, ஜாகுவார் போன்ற பழைய சொகுசுக் கார்களை வாங்கி அதனை புதுப்பித்து விற்பனையில் ஈடுபடவுள்ளதாகவும், அதற்கு முதலீடாக பணம் தேவைப்படுவதால் முதற்கட்டமாக 7 கார்களை வாங்குவதற்கு உண்டான பணத்தை அளிக்குமாறு விக்னேஷிடம் கேட்டுள்ளார். மேலும், தான் கார்களை விற்பதில் கிடைக்கும் பணத் தொகையை இருவரும் சரிசமமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் எனவும் சுதாகரன் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் இதுகுறித்து ஒப்பந்தம் செய்து 7 சொகுசுக் கார்களை வாங்குவதற்கு உண்டான பணம் சுமார் 1 கோடி ரூபாயை விக்னேஷ் சுதாகரனுக்கு அளித்துள்ளார்.

அதனடிப்படையில் சுதாகரன் அந்தப் பணத்தில் 7 கார்களை வாங்கி விற்று கிடைத்த பணத்தில் பாதியை விக்னேஷுக்கு அளித்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக மீண்டும் 7 சொகுசுக் கார்களை வாங்க பணம் தேவைப்படுவதாகக் கூறி சுமார் 1 கோடி ரூபாயை விக்னேஷிடம் சுதாகரன் கேட்டுள்ளார். ஏற்கனவே அளித்த பணத்திற்கு அதிக லாபம் ஈட்டித்தந்த சுதாகரனை நம்பிய விக்னேஷ் அவர் கேட்ட பணத் தொகையை அவருக்கு அளித்துள்ளார். இதனையடுத்து சுதாகரன் அந்தப் பணத்தில் மீண்டும் 7 சொகுசுக் கார்களை வாங்கி விற்பனை செய்துள்ளார். ஆனால் கார்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் பாதிப் பணத்தை ஒப்பந்தமிட்டபடி விக்னேஷுக்கு தராமலும், வாங்கிய சுமார் 1 கோடி பணத்தைத் திருப்பித் தராமலும் சுதாகரன் ஏமாற்றி வந்துள்ளார்.

சுதாகரன் தன்னை ஏமாற்றி வருவதை உணர்ந்த விக்னேஷ் அவரது மோசடி தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுதாகரன் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பெற்ற பணத்தைத் திருப்பி அளிப்பதாக உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்து சுதாகரன் முன் ஜாமின் பெற்றார். இந்நிலையில் அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பின்னும் சுதாகரன் விக்னேஷுக்கு அளிக்க வேண்டிய பணத்தை திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுதாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து ஜாகுவார் சொகுசுக் காரொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சொகுசுக் கார்களை சுதாகரன் யார் யாருக்கு விற்றார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுதாகரன் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.