வாடகைக்கு வீடு தேடும் நபர்களை குறிவைத்து மோசடி... லண்டன் பல்கலைக் கழக மாணவர் கைது ...

சென்னையில் வாடகைக்கு வீடு தேடும் நபர்களை குறிவைத்து லட்சக் கணக்கில் பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்ட லண்டன் பல்கலைக்கழக மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாடகைக்கு வீடு தேடும் நபர்களை குறிவைத்து மோசடி... லண்டன் பல்கலைக் கழக மாணவர் கைது ...

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மருத்துவரான இவர் கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். குரோம்பேட்டையில் இருந்து கொளத்தூர் வந்து செல்வதற்கு சிரமமாக இருந்தால் கொளத்தூர் அருகே வாடகைக்கு வீடு பார்த்து குடியேருவதற்காக இனையத்தளம் மூலமாக கார்த்திக் வீடு தேடியுள்ளார். 

மருத்துவர் கார்த்திக் வீடு தேடுவதை அறிந்து செல்போனில் தொடர்பு கொண்ட நபர் மேற்கு அண்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு இருப்பதாக தெரிவித்து வாட்சப் மூலமாக வீட்டின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் தான் வீட்டின் உரிமையாளர் என்றும் தான் வெளியில் இருப்பதாகவும் கூறி வீடு பிடித்திருந்தால் முன் தொகையை இப்போதே அளிக்குமாறு கேட்டுள்ளார்.

தனக்கு வீடு பிடித்திருப்பதாக கார்த்திக் கூறிய நிலையில், தொலைபேசியில் அழைத்த நபர் வாடகை ஒப்பந்தப் பத்திரம் போட்டு வாட்சப்பில் அனுப்பி முன் தொகையை அனுப்புமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய மருத்துவர் கார்த்திக் தனது வங்கிக் கணக்கு மூலமாக 5 தவணையாக 57 ஆயிரம் ரூபாயை அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் குடியேறுவதற்காக முயற்சி செய்தபோது செல்போன் எண் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று விசாரித்தபோது அங்கு ஏற்கனவே ஒரு குடும்பம் வசித்து வருவதை அறிந்து கார்த்திக் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இவ்வழக்கை அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றினர். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வங்கி கணக்கை வைத்து விசாரணை செய்ததில் மோசடியில் ஈடுபட்ட நபர் கடலூர் மாவட்டதைச் சேர்ந்த புஷ்பராஜ் (34) என்பதும், சொந்த ஊரில் அவர் இல்லாத நிலையில் வங்கியில் கொடுத்த செல்போன் எண் மற்றும் கார்த்திக் கொடுத்த செல்போன் எண்ணின் டவரை வைத்து வடபழனியில் அவர் பதுங்கி இருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.

மேலும் இரண்டு செல்போன் எண்ணிற்கு வந்த செல்போன் அழைப்புகளை பரிசோதனை செய்ததில் 10-க்கும் மேற்பட்டவர்கள் புஷ்பராஜால் ஏமாற்றப்பட்டுள்ளதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.  இதனையடுத்து இந்த விசாரணை தீவிரமடைந்த நிலையில், வட பழனியில் உள்ள தனியார் விடுதியில்  தங்கியிருந்த புஷ்பராஜை போலீசார் கைது செய்து அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சென்னையில் இதே போன்று பல்வேறு இடங்களில் வீடு தேடுபவர்களை ஏமாற்றி புஷ்பராஜ் தனது கைவரிசையைக் காட்டியதை ஒப்புக் கொண்டார். மேலும், OLX மற்றும் NoBrokers.com போன்ற இணையதள வெப்சைட்டுகளில் வீடு வாடகைக்கு தேவைப்படுபவர்களின் எண்களை சேகரித்தும், மற்ற இணைய தளங்களில் வீடு வாடகைக்கு என கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களை எடுத்து மீண்டும் NoBroker.com இணையதளம் மூலமாக வீடு வாடகைக்கு உள்ளதாகக் கூறி பதிவேற்றி இவரது செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்பவர்களுக்கு போலியாக வாடகை ஒப்பந்தப் பத்திரம் தயார் செய்து கொடுத்து வங்கி மூலமாக பணத்தைப் பெற்று கொண்டு மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொரட்டூரில் வீடு வாடகைக்கு தேவை என்று தேடியப்பொழுது இவனிடம் சிக்கி 8.5 இலட்ச ரூபாயை இழந்துள்ளார் என்பதும், இதே போன்று சென்னையில் பல்வேறு நபர்களிடம் மோசடி செய்து இலட்ச கணக்கில் சம்பாதித்த பணத்தை ஆன் லைன் ரம்மியில் புஷ்பராஜ் இழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் லண்டனில் MS கம்யூட்டர் நெட்வொர்க்கிங் முடித்து விட்டு சென்னையில் சில காலம் இதே போன்ற இணையத்தளத்தில் பணிப்புரிந்து வந்ததாகவும், ஆன் லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் போதிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால் , ஏற்கனவே பணி செய்த தன் அனுபவத்தை வைத்து இது போன்ற மோசடியில் ஈடுப்பட்டதாகவும் விசாரணையில் புஷ்பராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆன் லைன் ரம்மி விளையாட்டில் மட்டும் 11 இலட்சத்தை இழந்துள்ளதாகவும் இவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். போலீசார் அவனை கைது செய்து அவனிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததுடன் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாடகைக்கு இணையதளம் மூலம் வீடு தேடுபவர்கள் நேரிடியாகச் சென்று வீட்டை ஆய்வு செய்யாமல் பணத்தை அனுப்ப வேண்டாம் எனவும், பணப் பரிமாற்றத்தை நேரடியாக சந்தித்து செலுத்துவது ஏமாற்றங்களுக்கு வழிவகுக்காது எனவும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.