கழுத்தை அறுத்து தலைமை காவலர் மனைவி தற்கொலை!

ஈரோடு மாவட்டத்தில் தலைமை காவலரின் மனைவி, பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கழுத்தை அறுத்து தலைமை காவலர் மனைவி  தற்கொலை!

சத்தியமங்கலம் கரட்டூர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரமோகன். இவர் தலைமை காவலராகவுள்ளார். இவரது மனைவி தாமரைச்செல்வி (41). இவர்களுக்கு பிரவீன்(13), பிரனேஷ் (11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தாமரைச்செல்வி கடந்த 2 வருட காலமாக முடக்குவாத நோயால் இடுப்பு வலி மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்த அவர், கடந்த ஒரு மாதம் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும் கூறி, தற்கொலை கடிதமும் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று தாமரைச்செல்வி தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு முன் அறையில் படுத்திருந்த தலைமை காவலர் சந்திரமோகன், மகன்கள் எழுந்து சென்று பார்த்தபோது, தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தாமரைசெல்வியை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.