இரண்டு பேரை வழிமறித்து வெட்டிய கும்பல்... முன்விரோதம் காரணமா..?

கும்பகோணத்தில்  2 வாலிபரை வழிமறித்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல்  வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு பேரை வழிமறித்து வெட்டிய கும்பல்... முன்விரோதம் காரணமா..?

கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது  நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார்(22). இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இரவு இருவரும்  பெரிய கடைத்தெருவில் தங்களது லேப்டாப் சர்வீஸ் சென்டரில் கொடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது, சபரி நகர் அருகே 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்ததுள்ளது. அந்த கும்பல் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக யோகேஸ்வரன் போராடி உள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் விரட்டி அந்தக் கும்பல் யோகேஸ்வரனை 8 இடங்களில் வெட்டியுள்ளனர். அவருடன் சென்ற நந்தகுமாரையும் வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்ததும் 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொ) மோகன் தாஸ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக  தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கல்லூரியில் நடந்த தகராறில் முன்விரோதமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.