”ஜெர்மனியில் வேலை...மாதம் ஒரு லட்சம் சம்பளம்” ஆசைக்காட்டி மோசடி செய்த ஆசாமி..!

”ஜெர்மனியில் வேலை...மாதம் ஒரு லட்சம் சம்பளம்”  ஆசைக்காட்டி மோசடி செய்த ஆசாமி..!

ஜெர்மனி நாட்டில் வேலை மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்று கூறி 54 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி சென்ற நபர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியில் வேலை:

மயிலாடுதுறை திருவிழந்தூர் பெருமாள் கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் பூரணச் சந்திரன். புரோகிதரான இவர், ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதாக தன்னுடன் தொழில் முறையில் பழக்கத்தில் இருந்த தனது நண்பர்களிடம் கூறி ஆசை காட்டியுள்ளார்.  தொடர்ந்து, திருப்புங்கூரை சேர்ந்த நாதஸ்வர வித்வான் செந்தில்குமரன், திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் 26 பேரிடமும், மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்று மேலும் ஆசைக்காட்டி பணம் பெற்றுள்ளார். அதாவது ஒரு நபரிடம்  2 லட்சம் ரூபாயில் இருந்து 3.50 லட்சம் வரை வசூலித்து மொத்தமாக சுமார் 54 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார்.
 
விமான நிலையத்தில் விட்டு சென்ற பூரணச்சந்திரன்:

26 பேரிடமும் பணத்தை வாங்கி சுருட்டிய பூரணச்சந்திரன், அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான விசாவை கொடுத்துள்ளார். அதனை அவர்கள் அனைவரும் உண்மையென நம்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் பூரணச்சந்திரன்,  கடந்த மாதம் 28-ஆம் தேதி அந்த 26 பேர்களில் 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அழைத்து சென்ற 15பேர்களையும் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பூரணச்சந்திரன் தலைமறைவானார். இதன் பிறகு சந்தேகமடைந்த அவர்கள் விமான நிலையத்தில் விசாரித்தபோது தான், தாங்கள் 15 பேருக்கும் வழங்கப்பட்டது போலி விசா என்பது தெரியவந்தது.

போலீசாரிடம் புகார்:

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவிடம் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தனிப்படையும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது.

கைது செய்த போலீசார்:

இந்த வழக்கு தொடர்பாக, செல்போன் டவரை பரிசோதித்த காவல்துறையினர், பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருந்த பூரணச் சந்திரனை கைது செய்தனர். மேலும், பூரணசந்திரனிடம் இருந்து 12 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.