கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்... தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த இரு மகன்கள்!!
திருவள்ளூர் அருகே லாரி மோதி தந்தை கண் முன்னே இரண்டு மகன்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் ஆவடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் - சுமலதா தம்பதி. டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு ஆதிரன், கவுசிக் என்ற இரு மகன்களும் மற்றும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. இவர் மதுரவாயலில் உள்ள தனது உறவினர் சபரிமலைக்கு செல்வதால் அவர்களை வழியனுப்புவதற்காக சென்றுவிட்டு செல்வம் மற்றும் அவரது இரு மகன்களும் ,மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே வந்த போது வாகனம் ஒன்றில் உரசியதில் நிலைதடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர். இந்நிலையில் பின்னால் வந்த லாரி செல்வத்தின் இரு மகன்களான கவுசிக், ஆதிரன் மீது ஏறியதில் தலை நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கீழே விழுந்ததில் செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்து கொண்டிருந்த அவர் கண் முன்னே இரண்டு மகன்கள் இறந்து போனதை கண்டு கதறி அழுதார்.
இதையடுத்து காயம் அடைந்த செல்வத்தை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தந்தையின் கண்முன்னே இரு மகன்களும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.