உயிருக்கு போராடும் தாய்... தந்தையை கொலை செய்த மகன்கள்... காரணம் என்ன

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குடும்ப பிரச்சினையில் தாயை கத்தியால் குத்திய தந்தையை, மகன்களே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 

உயிருக்கு போராடும் தாய்... தந்தையை கொலை செய்த மகன்கள்... காரணம் என்ன

வத்தலகுண்டு அருகேயுள்ள செங்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த வனராஜ், ஈஸ்வரியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. 

அப்போது ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகன்கள் முத்துச்சாமி, ஊர்காலன் ஆகிய இருவரும் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவரை கத்தியால் குத்திய தந்தையை கட்டையால் இருவரும் சரமாரியாக தாக்கினர்.  இதில் வனராஜ் படுகாயமடைந்த நிலையில் கணவன் - மனைவி இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈஸ்வரி சிகிச்சை பெற்று வரும் நிலையில், வனராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.