ஆபாசமாக பேச பெண்களை தயார் செய்த மதன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்..

ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான மதன் யூ-டியூப்பில் ஆபாசமாக பேசுவதற்கு பெண்களை தயார் செய்து வைத்த தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாசமாக பேச பெண்களை தயார் செய்த மதன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்..
பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி தனது யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து இன்று கைது செய்தனர். மதன் தொடர்ந்து வி.பி.என் சர்வரை பயன்படுத்தி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கி இருந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து கைது செய்யும் போது, மதன் போலீசார் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கெஞ்சியதாக தகவல் வெளியாகியது. மேலும் மனைவி மற்றும் குழந்தையை விடக்கூறி கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
 
அவர் வீடியோக்களை பதிவேற்ற பயன்படுத்திய டேப்பை மதனிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் பதிவேற்ற தயார் நிலையில் இருந்த பல வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் வீடியோவில் ஆபாசமாக  பேசுவதற்காக பணம் கொடுத்து பெண்ணை தயார் செய்ததும் மதனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
 
இதுமட்டுமின்றி ஆதரவற்றோருக்கு உதவி வருவதாக மதனுக்கு ஆதரவாக பேசி  வெளியான வீடியோக்கள் அனைத்தும் பொய் எனவும் தன்னை புகழ்ந்து பேசக்கூடிய நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை மதன் அளித்தும் அந்த வீடியோவை தனது சேனலில் ஒளிப்பரப்பி பார்வையாளர்களிடம் இருந்து அதிக பணத்தை வசூலித்ததாகவும் தெரியவந்தது.  
 
குறிப்பாக ராணி என்ற பெண்மணிக்கு மட்டுமே 5 லட்சம் ரூபாய் வரை மதன் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபாசமாக பேசி வெளியிட்ட வீடியோ மூலம் சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாக்கள் வாங்கியதாகவும், 4 கோடி ரூபாய் வரை வங்கி கணக்கில் வைத்துள்ளதாகவும் தெரியவந்தது.
 
இதனையடுத்து பப்ஜி மதன்- கிருத்திகா வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் மதனின் சொகுசு கார்கள் இரண்டையும் பறிமுதல் செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துள்ளனர். இதனையடுத்து தர்மபுரியில் கைது செய்யப்பட்ட மதனை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். மேலும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மதனின் மனைவியான கிருத்திகாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணைகளில் மேலும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரக்கூடும் என்று தெரிகிறது.