சிகிச்சைக்கு வந்த 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்... மருத்துவமனை ஊழியரின் வக்கிரம்...

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிகிச்சைக்கு வந்த  8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்... மருத்துவமனை ஊழியரின் வக்கிரம்...

சென்னை சேத்துப்பட்டில் பல ஆண்டுகளாக தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 9 நாட்களாக 8 வயது சிறுமி  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் சிறுமியின் தாய் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஊழியரை தாக்கி உள்ளனர். பின்னர் இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததால் உடனடியாக சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோனுராம்(26) என்பவரை கைது செய்தனர். கடந்த 5 வருடங்களாக மோனுராம் இந்த மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த வழக்கானது கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநில ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய சட்ட நிபுணர்களிடம் போலீசார் ஆலோசனை பெற்று வருகின்றனர்.