ஒரு மணிநேரம் போராடியும் திறக்காத பூட்டு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற கொள்ளையன்...

தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அருகே கொள்ளையர்கள் ஒரு மணி நேரம் போராடியும் கோயில் கதவின் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு மணிநேரம் போராடியும் திறக்காத பூட்டு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற கொள்ளையன்...

தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நடுவிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது நாடியம்மன் கோயில். இந்தக் கோயில் இந்த கிராமத்திற்கு சொந்தமான கோயிலாகும். இக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மிகச் சிறப்பான முறையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த கோயிலில் இரண்டு மூன்று தடவை மர்மநபர்கள் கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இது பற்றி அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்த கிராமத்து மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் முக கவசம் அணிந்து இரும்பு ராடை கொண்டு கோயில் கருவறையின் பூட்டை உடைக்க  1 மணிநேரமாக முயற்சித்துள்ளார். இருந்தும் பூட்டு பலமாக இருந்ததால் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்று உள்ளார் இந்த நிகழ்வின் காட்சிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மீண்டும் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபற்றி இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், அடிக்கடி எங்கள் கோயிலில் திருட்டு போகிறது சமீபத்தில் நடந்த கொள்ளை முயற்சியை சிசிடிவி காட்சிகளோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் இதுவரை மனு ரசீது கூட வழங்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.  பெரிய அளவில் கோயிலில் கொள்ளை நடந்து போய் விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. எனவே உடனடியாக உயரதிகாரிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.