மறுவாழ்வு மையத்தில் சந்தேக மரணமடைந்த நபர்.. 7 பேரை கைது செய்து சிறையிலடைத்த காவல்துறை!
சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சந்தேக மரணமடைந்த நபரின் வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
சென்னை ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜு.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு தனது மனைவி கலாவிடம் தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கலா தனது கணவரை அப்பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்துள்ளார். போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்த ராஜு திடீரென கீழே விழுந்து இறந்து விட்டதாக கலாவிற்கு தகவல் வந்துள்ளது.
அதன்பேரில் கலா தனது உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்தபோது உடல் முழுவதும் ரத்தகாயங்களுடன் இருந்த தனது கணவரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், ராஜு அங்குள்ள ஊழியர்கள் அடித்துத் துன்புறுத்தியதால் தான் இறந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் அந்த மையத்தின் ஊழியர்களான யுவராஜ், கேசவன், செல்வமணி, உள்பட 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தது. மேலும் தலைமறைவாக உள்ள மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.