நடிகை வாய்ப்புத்தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர்...!

நடிகை வாய்ப்புத்தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர்...!

பொள்ளாச்சியில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி 
சென்னை கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாக இருந்த தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி புகார் கொடுத்தார். அதில், தனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. தான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தேன். அப்போது முகநூலில் டி.என்- 41 என்கிற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததை பார்த்தேன்.அதில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பேசினேன்.

அப்போது பேசிய நபர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறினார். இதையடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பொள்ளாச்சிக்கு சென்றேன். அங்கு விடுதியில் இருந்த கரூரை சேர்ந்த பார்த்திபன் (30) என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து 
தனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் மயங்கினேன். சுய நினைவு இல்லாமல் இருந்த தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். மயக்கம் தெளிந்து இது குறித்து அவரிடம் கேட்டதற்கு தற்போது உனக்கு 17 வயது தான் ஆகிறது. 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் அவர் என்னை படத்தின் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதே போன்று பலமுறை ஆசை வார்த்தை கூறி தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். 

மேலும், இதுகுறித்து அவரிடம் கூறி, உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியதாகவும், அதற்கு அவர் நீ குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்று கூறி சில மாத்திரைகளை வாங்கி கொடுத்து தனது கர்ப்பத்தை களைத்ததாகவும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் பொள்ளாச்சி  மகளிர் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள கரூரை சேர்ந்த அவரை வலைவீசி தேடி வந்தனர். தற்போது பார்த்திபன் மீது பொள்ளாச்சி மகளிர் போலீசார் போக்சோ வழக்கைமாற்றி கற்பழிப்பு வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பார்த்திபன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்திபனை கைது செய்து கோவை மத்தியசிறையில் அடைத்தனர்.