மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்...! நாடகமாடி சிக்கிய சம்பவம்...!

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்...! நாடகமாடி சிக்கிய சம்பவம்...!

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன்(29). இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வேலைக்காக வந்தார். கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும் இது குறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முகமது உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவர் முகமது உசேன், ரெஜினா பானு இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும் மறுநாள் காலையில் அவர் நீண்ட நேரமாகியும் எழாததால் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர். அப்போது போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் முகமது உசேன் வாக்குமூலமாக, ரெஜினா பானுவுக்கும் தனக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்போது தான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். தனக்கும் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வந்த போது தனக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு தன்னை மிரட்டினார். அப்போது அவரை சமாதானம் செய்தேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையில்  மனைவியின் கழுத்தை நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார் என்றும் ரெஜினாபானுவை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும் வாக்குமூவமாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : கரைப்பாலத்தை மூழ்கடித்து ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்...