பெட்ரோல் போட பணம் தர மறுத்ததால் மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...

பெட்ரோல் விலையும் உயர்வு, பெட்ரோல் போட வீட்டிலும் பணம் தரவில்லை என்பதால் மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோல் போட பணம் தர மறுத்ததால் மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் உள்ள பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி. இவர் நகராட்சியில்  தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார். இவரது மனைவி ரோகிணி பிரபா.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் மனோஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் திருஷ்ணசாமி தனது மனைவி ரோகிணி பிரபாவிடம், தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு  பெட்ரோல் போடுவதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி ரோகினி பிரபா தன்னிடம் பணம் இல்லை என்றும் மாமனாரிடம் பணம் வாங்கித்தருவதாக கூறி உள்ளார்.

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் தன்னுடைய சம்பள பணத்தில் பாதி பெட்ரோலுக்கு போய்விடுவதாக நினைத்து அடிக்கடி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. இதற்கிடையில் வாகனத்திற்கு பெட்ரோல் போட வீட்டில் பணம் கேட்டும் கொடுக்காததால் மனம் நொந்துபோய் புலம்பியவாறே இருந்துள்ளார்.

 அப்போது அவரது மனைவி ரோகினி பிரபா பாத்ரூம்க்குள் சென்று விட தனியாக இருந்த கிருஷ்ணசாமி தீடீரென வீட்டில் இருந்த  மனைவியின் சேலையினை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு பாத்ரூமில் இருந்து வெளியே வந்து பார்த்த மனைவி ரோகினி, தன் கண்முன்னே கணவர் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.

அவர் அழுவதை பார்த்து ஓடி வந்த அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், கிருஷ்ணசாமியின்  உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார்,பெட்ரோல் போடுவதற்கு பணம் தர மறுத்த காரணத்தினால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது  வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.