முதியவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மகும்பல்...!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 60 வயது முதியவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முதியவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மகும்பல்...!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி கருப்பையா . 60 வயதான இவர், வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவதன்று கருப்பையா அவர்களின் உறவினர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டதாக தெரிகிறது. வெகுநேரமாகியும் தொலைபேசியின் அழைப்பை எடுக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள், கருப்பையாவை நேரில் சென்று பார்த்துவர முடிவு செய்து அவரின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அங்கு கருப்பையா மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடந்த உறவினர்கள், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், முதியோரை வெட்டிபடுகொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.