வளர்ப்பு நாயை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற கொடூரம்... போதை ஆசாமி யை கைது செய்து விசாரணை...

குடிபோதையில் வளர்ப்பு நாயை வீட்டின் மாடியில் இருந்து தூக்கிவீசிக் கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வளர்ப்பு நாயை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற கொடூரம்... போதை ஆசாமி யை கைது செய்து விசாரணை...

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில். இவர் நேற்று தனது நண்பரான ஸ்டெல்லின் என்பவருடன் தனது வீட்டின் மொட்டை மாடியில் ஒன்றாக மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையில் செந்தில் மாடியிலேயே உறங்கிவிட்ட நிலையில், குடிபோதையில் இருந்த ஸ்டெல்லின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது அந்த குடியிருப்பில் உள்ள வளர்ப்பு நாயொன்று அவர் அருகே வந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது மது போதையில் இருந்த ஸ்டெல்லின் வளர்ப்பு நாயை தூக்கி மாடியிலிருந்து கீழே வீசினார். இதில் வளர்ப்பு நாய் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. நாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த நாயின் உரிமையாளர் பிரவீன் குமார் தனது வளர்ப்பு நாய் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மேலும், நாயை மாடியில் இருந்து தூக்கி வீசியது ஸ்டெல்லின் என்பதை அறிந்த பிரவீன் குமார் இச்சம்பவம் தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சேப்பாக்கம் லாக் நகர் ரேணுகா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்டெல்லின் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.