மது போதையில் தகராறு செய்த ரவுடி...! சிசிடிவி காட்சிகளில் சிக்கிய சம்பவம்..!

மது போதையில் தகராறு செய்த ரவுடி...! சிசிடிவி காட்சிகளில் சிக்கிய சம்பவம்..!

சென்னை பெரம்பூர் டாக்டர் அம்பேத்கர் நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் வசிம் பாட்ஷா(36). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை வழி மறித்த நபர் மது குடிக்க வேண்டும் என்று கூறி 50 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனரான வசிம் பாஷா பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து வசிம் பாஷா கழுத்தை அறுத்துள்ளார். 
இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த வசிம் பாஷாவை அருகில் இருந்தவர்கள் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைகாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வசிம் பாஷா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செம்பியம்  போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருவிக நகர் மதுரைசாமி மடத்தைச் சேர்ந்த வேலு என்கின்ற வேலாயுதம் (26) என்ற நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே அயனாவரம், பெரவள்ளூர், திருவிக நகர், செம்பியம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை அடுத்து வேலாயுதத்தை நேற்று கைது செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ தீவிரம்....கட்டாயம் விடுப்பு வழங்கக் கோரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!