அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்து- கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு...

சீர்காழி அடுத்த கற்கோயில் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்து- கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணியை  பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு அதன்பின்னர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கற்கோயில் உடையாம்பாளையம் என்ற இடத்தில் அதிவேகமாக எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது.

இச்சம்பவத்தில் கர்ப்பிணியான தமிழ் வாணியும் அவரது கணவர் புருஷோத்தமனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது மோதியபடி சென்ற கார், 100 நாள் வேலை முடித்துவிட்டு சாலையோரம் நடந்து சென்ற தையல்நாயகி, ராணி ஆகியோர் மீது மோதியுள்ளது. இதனையடுத்து காரை நிறுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த தையல்நாயகி, ராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.