மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இரண்டு இளைஞர்கள் கைது...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிருவாங்கூர் பகுதியில் மூதாட்டியிடம் இருந்து நகை பறித்துச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிருவாங்கூர் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருபவர் அம்சவேல். இவரது மனைவி விருத்தாம்பாள் கடந்த 1-ம் தேதி கடையில் இருந்த போது 2 இளைஞர்கள் சில்லறை வாங்குவது போல் நடித்து நொடிப் பொழுதில் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் குற்றவாளிகளை துரத்திச் சென்றுள்ளனர். இதில், பயந்த குற்றவாளி வாகனத்தை காட்டுப்பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளிகள் வாகனத்தை விட்டுவிட்டு சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
அதனைதொடர்ந்து வாகனத்தை கைப்பற்றிய போலீசார், பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒருவர் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஏழுமலை என்றும் மற்றொரு நபர் திருநாவுகரசு என்பது தெரியவந்தது.
அதனைதொடர்ந்து இருவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, மாமனார் வீட்டில் இருவரும் பதுங்கி இருந்தது தெரியவந்தது. விரைந்து சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.