விழுப்புரம் : தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலை...3 பேர் கைது..!

விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது... போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்...

விழுப்புரம் : தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலை...3 பேர் கைது..!

விழுப்புரத்தில் நடந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலையில், அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊழியர் கொலை :  

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை, குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த சவரிமுத்து மகன் மரியபிரபாகரன் (32). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, விழுப்புரம் ரெயில்வே மருத்துவமனை அருகில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். 

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மரியபிரபாகரனை, விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை தெற்கு காலனியை சேர்ந்த அவரது நண்பர்களான, தியாகராஜன் மகன் பாலா என்கிற பாலமணி (23), பவர்ஹவுஸ் சாலை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் குகன் (24), விழுப்புரம் பாணாம்பட்டு பாதை அரவிந்த் நகரை சேர்ந்த மோகன் மகன் வல்லரசு (22) ஆகியோர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

3 பேர் சிக்கினர் :  

இதையடுத்து கொலையாளிகள் 3 பேரையும் பிடிக்க, விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஆனந்தன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெளியூருக்கு தப்பிச் செல்ல விழுப்புரத்தில் பதுங்கியிருந்த பாலா என்கிற பாலமணி, குகன், வல்லரசு ஆகியோரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் வெளியான தகவல்கள்:

கொலை செய்யப்பட்ட மரியபிரபாகரன், வேலை காரணமாக பணம் வசூலிக்க செல்லும் இடண்களுக்கெல்லாம் தனது நண்பர்களான பாலா உள்ளிட்ட 3 பேரையும் உடன் அழைத்து செல்வார். அதோடு 4 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது மது போதையில் மரியபிரபாகரன், நண்பர்கள் 3 பேரையும் ஒருமையில் திட்டியுள்ளார். இதனால், அவர்கள் 3 பேருக்கும் மரியபிரபாகரன் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டு, மரியபிரபாகரனை கொலை செய்ய முடிவு செய்தனர். 

இந்த நிலையில் மரியபிரபாகரன், தனது நண்பர்களான பாலா, வல்லரசு, குகன் ஆகியோருடன் விழுப்புரம் ரெயில்வே மருத்துவமனை அருகே உள்ள முட்புதரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாலா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, முன்னதாக திட்டமிட்டபடி மரியபிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். பின்னர் குகனும், வல்லரசுவும் மரியபிரபாகரனின் கை, கால்களை பிடிக்க, பாலா, தான் வைத்திருந்த கத்தியால் மரியபிரபாகரனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். அவர் இறந்ததும் அங்கிருந்து 3 பேரும் தப்பியோடியதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலா, குகன், வல்லரசு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.