பெண்ணை கத்தியால் வெட்டிய கும்பல் கைது...

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் சாலையில் சென்ற பெண்ணை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்ணை கத்தியால் வெட்டிய கும்பல் கைது...

திருவல்லிக்கேணி அடுத்த திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்தவர் சல்மா. இவர் கபூர் சாகிப் தெரு அருகில் ஆட்டுக்கால் வியாபாரம் செய்து வருகிறார். இதற்கிடையில் சவுகத் என்பவர் கடந்த மாதம் சல்மாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே திருமணமான சவுகத்திற்கும் அவருடைய முதல் மனைவியான பரனாவிற்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால் தான், கணவர் சவுகத் சல்மாவை இரண்டாவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் முதல் மனைவி பரனாவின் தம்பி தீன் முகமது மற்றும் ஜாஹிர் ஆகியோருக்கும், சல்மாக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி சல்மாவை, பரனா  சகோதரர்கள் தீன் முகமது, ஜாஹிர் உசேன் ஆகியோர் ஐஸ்அவுஸ் அருகில் உள்ள கபூர் சாஹிப் தெருவிற்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த சல்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடியே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால்  தீன் முகமது உள்பட 3 பேரும் சேர்ந்து தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளனர்

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. பின்னர் தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான தீன் முகமது , ஜாகிர் உசேன், முஸ்தபா  ஆகியோரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.