நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது...!

வந்தவாசி அருகே செவிலியரிடம் நகை பறித்த இரண்டு இளைஞர்கள் கைது...

நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது...!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த, தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிபவர் தாமரைச்செல்வி. இவர் கடந்த மாதம் பணியை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள்  தாமரைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தாமரைச்செல்வி தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட, உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தெள்ளார் காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்திய போது செவிலியர் தாமரைச்செல்வியின் நகையை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்த 7 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.