17 வயது தங்கையின் காதல்... அண்ணனுக்கு நேர்ந்த சதக் சதக்...

17 வயது தங்கையின் காதல்...  அண்ணனுக்கு நேர்ந்த சதக் சதக்...

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே தங்கையின் காதலை கண்டித்த அண்ணன் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து.

தேன்கனிகோட்டை அருகேயுள்ள பள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது 17 வயது மகளும் எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் அந்த சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார். 

இந்நிலையில் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தது குறித்தும், தான் தற்கொலை செய்ய செல்வதாகவும் காதலன் சந்தோஷ்குமாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சந்தோஷ்குமார் நான் உன்வீட்டில் உள்ளவர்களிடம் பேசுகிறேன் என்று கூறி காதலியை சமாதானப்படுத்தியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரும் அவரது நண்பர்களும் காதலியின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 
இதில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது. அதன் பின்னர் இரவு நேரத்தில் அந்த சிறுமியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஆயுதங்களுடன் ஸ்ரீனிவாசன் வீட்டிற்கு சென்று தகறாரில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஸ்ரீனிவாசனின் மகன் செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்களான லோகேஷ், புட்டராஜ் ஆகிய 3 பேரை குத்தியுள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரையும், அப்பகுதியினர் மீட்டு ஒசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து காதலன் உட்பட 8 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.