தங்கத்துக்காக கடத்தப்பட்ட வாலிபர்...! கடத்தல்காரனை வெளுத்து வாங்கிய மக்கள்...!!

தங்கத்துக்காக கடத்தப்பட்ட வாலிபர்...! கடத்தல்காரனை வெளுத்து வாங்கிய மக்கள்...!!

திருச்சியில் தங்கத்துக்காக வாலிபர் கடத்தப்பட்டதும் அப்போது பொதுமக்கள் கடத்தல்காரர்களை பிடித்து தர்ம அடி  கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, குவைத் போன்ற பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமான பயணி என்ற பெயரில் தங்கக் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அவ்வப்போது திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இருந்தபோதிலும் நாள்தோறும் லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்க கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய், தோஹா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து 8 விமானங்கள் வந்து சேர்ந்தன. அதில் வந்த பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கங்களை வாங்குவதற்காக நேற்று இரவில் இருந்து வியாபாரிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அந்தவகையில், திருச்சி புத்தூர் மூலக்கொல்லை பகுதியை சேர்ந்த இடைத்தரகர் சாதிக் பாட்சா மற்றும் அவரது தம்பி முகமது ஷெரிப் ஆகியோர் இன்று அதிகாலை 1 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்குச் சென்று, சிங்கப்பூர் விமானத்தில் வந்தவரிடமிருந்து 20 கிராம் தங்கச் செயினை வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது இதுகுறித்து தகவலறிந்த தகவல் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தனது நண்பர்கள் 7 பேருடன், சாதிக்பாட்சாவை ஏர்போர்ட்டில் இருந்து கண்காணித்து, அவரது காரை பின் தொடர்ந்து ஒரு கார் மற்றும் 2 டூவிலரில் வந்துள்ளார். நள்ளிரவு 1.45 மணியளவில் சாதிக் பாஷா தரப்பினர் தென்னூர் மூலக்கொல்லை பகுதியில் காரில் இருந்து இறங்கும்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் சாதிக் பாட்சாவையும், தங்க நகைகளையும் கடத்த முயன்றனர். அப்போது சாதிக் பாட்சா கூச்சலிட்டதால், நோன்பு திறப்பதற்காக தொழுகை முடித்துவிட்டு பள்ளி வாசல் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் அங்கிருந்து சாதிக்பாட்சாவுடன் நகைகளையும் தூக்கி சென்றனர். அதில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் மட்டும் காரில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்தார். அவரை பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.

அதன்பின்னர் தான் கடத்தல் சம்பவம் நடந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து தில்லைநகர் காவல்துறையினர் தென்னூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி அரசு மருத்தவமனை காவல்நிலையத்திற்கு வந்து சிகிச்சைபெற்று வந்த கதிரேசனைிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், கதிரேசனை ஒப்படைத்தால் நாங்கள் சாதிக்பாட்சாவை விடுவிப்போம் என்று கடத்தல் கும்பல தெரிவித்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட போலீஸ் டீம், கதிரேசனை கைது செய்து அவரை அழைத்துக்கொண்டு சமயபுரம் பகுதியில் காத்திருந்த கடத்தல் கும்பலிடம் சென்றள்ளனர்.

காவல்துறையினர் வருவதற்குள் மர்ம நபர்கள் சாதிக்பாட்சாவை அதே பகுதியில் இறக்கிவிட்டு சென்றனர். இதையடுத்து சமயபுரம் பகுதியில் அவரை மீட்ட காவல்துறை அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தது.

ஆனால் இதில் சாதிக் பாட்சா எவ்வளவு நகை கொண்டுவந்தார்? என்பது இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை. ஆனால், சாதிக்பாட்சா 3 கிலோவுக்கு மேல் தங்க நகைகள் கொண்டு வந்திருக்கலாம் எனக் கருதியே, கதிரேசன் தரப்பு இந்த சம்பவத்தை செய்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையிர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பிடிபட்டுள்ள கதிரேசனும் கடத்தல் தங்கத்தை வாங்கும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். கடத்தல் பிசினஸில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக, கதிரேசன் தரப்பினர் சாதிக் பாட்சாவை கடத்தி இச்சம்பவத்தை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கூட்டாளிகள் சமீர், பிரதாப், பிரகாஷ் உட்பட இன்னும் 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.