ரயில் மோதி...! தண்டவாளத்தில் படுத்து தூங்கிய  2 வாலிபர்கள் உயிரிழப்பு...!!

 ரயில் மோதி...! தண்டவாளத்தில் படுத்து தூங்கிய  2 வாலிபர்கள் உயிரிழப்பு...!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது அவ்வழியாக சென்ற ரயிலில் அடிப்பட்டு  2 வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தேறும் சித்திரை மாதம் வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் சித்திரை திருவிழா கடந்த 14ந்தேதி துவங்கியது. முக்கிய திருவிழா நாளான 10ம் நாள் நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இந்தநிலையில் திருவிழாவை காணவந்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருள்குமார் (17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத்குமார் (17), நாகை மாவட்டம், மேலமருதூர், தெற்கு பிடாரி கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் முருகபாண்டியன்(24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட சோர்வில் அருகில் இந்த ரயில்வே தண்டாவளத்தில் படுத்து உறங்கியுள்ளனர். அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது அதிகாலை சுமார் 3 மணியளவில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது ஏறிச் சென்றது. இதில் இருவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத்குமார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை காவல் துணைகண்காணிப்பாளர் விவேகானந்தன், காவல் ஆய்வாளர் ராஜேஷ், துணை ஆய்வாளர்  பாலசுப்பிரமணியன் மற்றும் திருவாரூர் ரயில்வே காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கோவில் திருவிழாவின்போது நடந்த இந்த துயர சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.