மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து...!

மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து...!

சென்னை, அண்ணாசாலை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை, அண்ணா சாலை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் நேற்று இரவுப் பணியில் இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் மின்வாரிய அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்து கரும்புகை கிளம்பி உள்ளது. இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்து உடனடியாக வெளியே வந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரண்டு ஊழியர்கள் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில் அலுவலகத்தில் இருந்த கணினி, மேசை, நாற்காலி மற்றும் பல்வேறு ஆவணங்கள் தீயில் கருகி சாம்பலாகின.மேலும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.