மாம்பழம் வாங்குகிறீர்களா... தேவை அதீத கவனம்!!

மாம்பழம் வாங்குகிறீர்களா... தேவை அதீத கவனம்!!

ரசாயனம் கொண்டு பழுக்க வைத்ததால் கோவையில் 25 ஆயிரம் கிலோ மாம்பழம் மற்றும் சாத்துக்குடிகளை பறிமுதல்  செய்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவையில் மாம்பழம், சாத்துக்குடி என ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில்  உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி-1, பவள வீதி-II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் எட்டு குழுவாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த திடீர் கள ஆய்வின் போது 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.   இதைத் தொடர்ந்து அதிகாரிகள் 22,500 கிலோ பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் 2.500 கிலோ சாத்துகுடி என மொத்தம் 25 ஆயிரம் கிலோ மாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு சுமார் 12 லட்சத்து 56 ஆயிரத்து 400 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து 16 கடைகள் மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  பார்வை சவாலுடைய பெண்ணுக்கு பணி ஆணை வழங்கிய ஸ்டாலின்...!!