வைகை ஆற்றை சுத்தம் செய்யுங்கள் - சிவகங்கை விவசாயிகள் வலியுறுத்தல்

நாணல், கருவேல மரங்களால் நீரோட்டம் பாதிப்பு, வைகை ஆற்றை சுத்தம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்.

வைகை ஆற்றை சுத்தம்  செய்யுங்கள் -  சிவகங்கை விவசாயிகள் வலியுறுத்தல்

பாரம்பரியம் மிக்க புண்ணிய நதியான வைகை ஆற்றை ஆக்ரமித்துள்ள கருவேல மரங்கள், நாணல்களை அகற்றி நீரோட்டம் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் வருச நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. மழை காலங்களில் வைகை அணையில் தண்ணீரை சேமித்து வைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 49 ஆண்டுகள் ஆகியும் வீரியம் குறையாத பெரியாரியம்; முதலமைச்சர் மரியாதை

வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பி மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் 73 கண்மாய்கள் உள்ளன. 263 கி.மீ தூரமுள்ள வைகை ஆற்றின் அகலம் 250 மீட்டரில் இருந்து 350 மீட்டர் வரை இருக்க வேண்டும், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் வைகை ஆறு 50 சதவிகிதம் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் கருவேல மரங்களும் நாணல் புற்களும் ஆக்ரமித்துள்ளன. ஆற்றில் தண்ணீர் பரவலாக சென்றால் மட்டுமே ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நாணல் புற்களால் தண்ணீர் நீரோட்டம் தடுக்கப்பட்டு ஒரு பகுதியிலேயே செல்வதால் ஆற்றை ஒட்டி இருந்தாலும் தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீர்வரத்து இல்லாத காலங்களில் நாணல் புற்களை மறைவிடமாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. வைகை ஆற்றை சுத்தம் செய்ய கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டு மணலூரில் இருந்து ஒரு கி.மீ தூரம் வரை மட்டுமே சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின் கிடபபில் போடப்பட்டதால் மீண்டும் நாணல்புற்கள் வளர்ந்து விட்டன. வைகை ஆறு மற்றும் வரத்து கால்வாய்களிலும் நாணல், கருவேல மரங்கள் அடர்ந்த காணப்படுகின்றன.

மேலும் படிக்க | கரும்பு விவசாயிகளுக்கு துரோகம் - பொங்கல் பரிசில் கரும்பை சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நாணல் புற்களால் தண்ணீரின் வேகம் குறைந்து வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்படும் நாணல் புற்களால் தண்ணீர் கண்மாய்களுக்கு முழுமையாக போய் சேர்வதில்லை. இதனால் விளைச்சலும் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே வைகை ஆற்றை முழுமையாக சுத்தம் செய்து விவசாயத்திற்கு தண்ணீர் முழுமையாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்