நகர சபை கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு....!!

நகர சபை கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு....!!

சின்னமனூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்வதில் மெத்தனம் காட்டி நகராட்சி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் கூறி நகர சபை கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில்  நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சின்னமனூர் நகர் பகுதியில் சரிவர சுகாதாரப் பணி துப்புரவு பணி மற்றும் குடிநீர் வழங்கும் பணிகளை நகராட்சி ஊழியர்கள் சரிவர செய்வதில்லை என்றும் நகரில் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கில்  நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும், கவுன்சிலர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து டெண்டர் மற்றும் காண்ட்ராக்ட் ஏல பணிகளை செய்து வருவதாகவும் புகார் கூறி 19 வார்டுகளை சேர்ந்த அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்து நகராட்சியின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரமன்ற தலைவர் கவுன்சிலர்களிடம் வந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதாக சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். நகராட்சியின் மெத்தனப் போக்கினை காரணம் காட்டி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:  இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர்..... போலி ஆவணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!!