அலைக்கழிக்க வைக்கும் அதிகாரிகள்..! கோவமான ஆட்சியர்...!! 

அலைக்கழிக்க வைக்கும் அதிகாரிகள்..! கோவமான ஆட்சியர்...!! 

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சில துறைகளில் இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்  கலந்து கொள்ளாததால் வந்திருந்த அத்துறை பணியாளர்களை மாவட்ட ஆட்சியர்  வெளியே அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 'பொது மக்கள் குறைதீர்க்கும் நாள்' கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பெற்று கொண்டார். 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம். அதில் பொது மக்களிடம் வாங்கப்படும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ய அந்தந்த துறை அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரிகள் ஒருவரே தொடர்ந்து வராமல் மாறி மாறி வருவதால் ஏற்கனவே வாங்கிய மனுக்களை பற்றி தங்களுக்கு தெரியாது என தொடர்ந்து கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தொடர்ந்து இது நடைபெற்று வருவதால் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது. இதனால் மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். 

இதனிடயே இன்று அரியலூர் நகராட்சி மற்றும்   சுகாதாரத்துறை இரண்டாம் நிலை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல்  அலுவலக பணியாளர்களை அனுப்பி வைத்திருந்தனர். இதனால் கோபமுற்ற மாவட்ட ஆட்சியர்  ரமண சரஸ்வதி உரிய அதிகாரிகள் இருந்தால் மட்டுமே மனுக்கள் மீது சரியான பதில் அளிக்க முடியும், மனுவிற்கும் தீர்வு காணமுடியும் எனக்கூறி இனி வரும் கூட்டங்களில் அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் உத்தரவிட்டார். மேலும் அலுவலக பணியாளர்கள் அனைவரையும் குறைதீர் முகாமில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.