மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்...!

மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய  பொதுமக்கள்...!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள  ஒலக்கசின்னானூர் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு சங்ககிரியிலிருந்து, ஈரோடு குமாரபாளையம் செல்லும் முக்கிய பிரதான சாலை சந்திப்பிலுள்ள வசந்தம் காலனி பகுதியில் மாற்றி அமைப்பதற்காக அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று அரசு மதுபான கடை திறப்பதாக தகவல் பரவியது. இது குறித்த தெரிந்த வசந்தம் காலனி பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்கப்படவுள்ள அரசு மதுபான கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், இப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும் புதிதாக மதுபான கடை திறக்கப்பட உள்ள இடம் பேருந்து நிறுத்தம் மற்றும் கோவில்களும் விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மணி மண்டபம் போன்ற பல்வேறு புனிதமான இடங்கள் உள்ளதாகவும் இதுவரை பெண்கள் பாதுகாப்பாகவும் எந்த நேரத்திலும் இந்த சாலையில் சென்று வருவதாகவும் இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் கூறியுள்ளனர். 

எனவே இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கக் கூடாது எனவும் இந்த தடையும் மீறி அரசு திறந்தால் சாலை மறியல் உள்ளிட்ட எந்த போராட்டத்தையும் நடத்த தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களுக்கு துணையாக ஆண்களும் அங்கு திரண்டு கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சங்ககிரி  காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் கலால் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் மதுபான கடை திறக்க விடமாட்டோம் என உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.