முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு...

முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு...

பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்திற்காக  பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, லஞ்சம் வாங்கியதாக  கைது செய்யப்பட்டு,அவர் மீது வழக்கு ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கணபதி வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | பச்சையப்பன் கல்லூரி முறைகேடு - தனி நீதிபதி உத்தரவு ரத்து...

முதல் தகவல் அறிக்கையில் எந்த இடத்தில், யாரிடம் பணம் பெற்றது உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை என்றும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.வழக்கு தொடர்பாக மற்ற சிண்டிகேட் உறுப்பினர்கள் யாரிடமும் விசாரிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். 

உதவி பேராசிரியர்கள் நியமன முறை வெளிப்படை தன்மையோடுதான் நடைபெற்றதாகும் அவர் வாதிட்டார். இந்த வழக்கு உள்ளோக்கத்தோடு பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். 

மேலும் படிக்க | சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி....! அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை...!

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யாரிடம் எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது என்ற பட்டியலை தாக்கல் செய்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்  சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அரசு உத்தரவின் பேரிலேயே,சோதனை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். 

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, விசாரணை தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் மனுதாரர் முறைகேடு செய்தது மட்டுமில்லாமல், தகுதி இல்லாத நபர்களுக்கு பணிகளை வழங்கி தகுதியுடைய நபர்களுக்கு பணியை மறுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கல்வி அமைப்பு முறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் இது போன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் இல்லையென்றால் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே வழக்கு ரத்து செய்ய முடியாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - 2 பேர் பணி நீக்கம்...